வாஷிங்டன்: அமெரிக்கா அதன் துருப்பினரைப் பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று, ஜனவரி 29ஆம் தேதி, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
ஈரானிய ஆதரவுடன் செயல்படும் போராளிகள், ஜனவரி 28ஆம் தேதி ஜோர்தானில் உள்ள அமெரிக்க முகாம் மீது நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலின் தொடர்பில் ஈரான் மீது போர் தொடுக்கப்போவதில்லை என்று அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் கூறியுள்ள வேளையில் அமைச்சர் ஆஸ்டினின் கருத்து வெளியானது.
“நானோ, அதிபர் பைடனோ அமெரிக்கப் படையினர் தாக்கப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அமெரிக்காவையும் நமது படையினரையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்,” என்று அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “அதிபர் பைடன் நேற்றுக் கூறியதைப்போல, நாம் இதற்குத் தக்க பதிலளிப்போம். அந்தப் பதில், பல நிலைகளில் கட்டங்கட்டமாக, நீண்டகால அடிப்படையில் அமையும்,” என்றார்.
ஆனால், அதிபர் பைடனின் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், நிலைமை மோசமடைவதை விரும்பவில்லை என்கின்றனர். ஈரானும் போரை விரும்பவில்லை என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.
வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்புப் பிரிவுப் பேச்சாளர் ஜான் கிர்பி, “ ஈரானுடன் இந்தப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வுகாண்பது நம் நோக்கமன்று,” என்று குறிப்பிட்டார்.
ஜோர்தான் முகாமில் ஏறக்குறைய 350 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ளனர். தாக்குதல் மேற்கொண்ட ஆளில்லா வானூர்தியைத் தடுத்து நிறுத்த அவர்களால் ஏன் முடியவில்லை என்பதன் காரணத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.
தாக்கிய ஆளில்லா வானூர்தி அந்த முகாமை நெருங்கிய அதேவேளையில் அமெரிக்க ஆளில்லா வானூர்தி ஒன்றும் முகாமை நோக்கி வந்ததாக அதிகாரிகள் இருவர் கூறினர். தாக்கிய வானூர்தி மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் அது அடையாளம் காணப்படாததற்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
சென்ற அக்டோபர் மாதம் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு, அமெரிக்கப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆகக் கடுமையான தாக்குதலாக ஜோர்தான் தாக்குதல் கருதப்படுகிறது.
மத்திய கிழக்கு வட்டாரத்தைச் சூழ்ந்துள்ள பதற்றம் இதனால் அதிகரித்துள்ளது.