வாஷிங்டன்: ஈரானின் ஆதரவோடு இயங்கும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை (28 ஜனவரி) அந்தத் தாக்குதலில் பலர் காயமும் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அரசியல் ரீதியாக நெருக்குதல் இருந்து வருகிறது.
ஈரானுக்கு நேரடியாக ஒரு பின்னடைவை ஏற்படுத்துமாறு திரு பைடனுக்குக் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் பல்வேறு இடங்களுக்குப் பரவாமல் பார்த்துக்கொள்ள அவர் அந்நடவடிக்கையில் ஈடுபடத் தயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை திரு பைடன் தாக்குதல் மேற்கொள்ள முடிவு செய்தால் ஈரானுக்கு வெளியிலும் உள்நாட்டிலும் செயல்படும் அந்நாட்டுப் படைகள் குறிவைக்கப்படக்கூடும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இல்லாவிடில் அமெரிக்க துருப்புகளைக் கொன்ற ஈரான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகளை அமெரிக்கா குறிவைக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறினர்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டது. அப்போதிருந்து ஈராக், சிரியா, ஜோர்தான், ஏமன் கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகள் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கப் படைகள் மீது 150 முறைக்கு மேல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்க துருப்புகள் கொல்லப்படவில்லை. அவற்றில் இத்தனை பேர் காயமடையவும் இல்லை. வடகிழக்கு ஜோர்தானில் சிரியாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள ‘டவர் 22’ எனும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தாக்குதல் நடந்தது.
அமெரிக்கா அதற்குப் பதிலடி கொடுக்கும் என்று திரு பைடன் கூறினார். ஆனால் அவர் மேல்விவரங்கள் ஏதும் வழங்கவில்லை.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி குடியரசுக் கட்சியினர் திரு பைடனைக் குறை கூறி வருகின்றனர்.