ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான விரைவு ரயில் பாதைக்கான (ஆர்டிஎஸ்) கட்டுமானப் பணிகள் இவ்வாண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் முக்கியமான கட்டத்தை எட்ட இருப்பதால் ஜோகூர் பாரு நகர மையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியாது என்று அந்நகர மேயர் முகம்மது நூரஸாம் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகளை முன்னிட்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை ஜோகூர் பாரு நகர மையத்தில் பல சாலைகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரையும் ஜோகூர் பாருவையும் இணைத்து வைக்கும் இந்த ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டிறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜோகூர் பாரு நகர மையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்கெனவே பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், ரயில் பாதைக்கான கட்டுமானப் பணிகள் இதை மோசமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதைத் தவிர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். வழிவகைகளைப் பரிசீலித்து வருகிறோம்,” என்று ஜனவரி 30ஆம் தேதியன்று ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் நகரில் குடியிருப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு நூரஸாம்.