சோல்: தென்கொரியா அருகே அமெரிக்காவுக்குச் சொந்தமான எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ஜனவரி 31ஆம் தேதி காலை நிகழ்ந்ததாக அது கூறியது.
போர் விமானத்தின் விமானி காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவின் மேற்குக் கடற்பகுதிக்கு மேல் அந்த போர் விமானம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று அவசரநிலை ஏற்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
அதையடுத்து, மொக்டியோக் தீவுக்கு அருகில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன்பு, விமானி விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேறியதாகவும் தென்கொரிய நேரப்படி 9.30 மணி அளவில் அவர் மீட்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியது.
அவர் மீட்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மீட்புப் பணியின்போது தென்கொரியா தந்த ஒத்துழைப்புக்கு அமெரிக்க ராணுவம் நன்றி தெரிவித்தது.
“விமானியை உடனடியாக, சுமூகமான முறையில் காப்பாற்ற வழிவகைகளை அமைத்துத் தந்த தென்கொரிய மீட்புப்படைக்கும் எங்கள் வீரர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கர்னல் மேத்யூ சி.கேட்கே கூறினார்.
இனி, விழுந்து நொறுங்கிய விமானத்தைத் தேடும் பணியில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
பாதுகாப்பு, விபத்து புலனாய்வு நிறைவுபெறும் வரை விமானம் விழுந்து நொறுங்கியதற்கான காரணம் வெளியிடப்படாது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.