கோலாலம்பூர்: மலேசிய சிறுவர்களுக்கிடையே புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்தப் போக்கு கவலைக்குரியது என்று குறிப்பிட்ட மலேசிய சுகாதார அமைச்சு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் தொடர்பாக சமூக ஊடகம் வாயிலாகப் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.
“புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் குறித்து எனக்குத் தனிப்பட்ட முறையில், நேரடியாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்துவிட்டேன். புத்துணர்ச்சி இன்ஹேலர்களுக்கு எதிராகக் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று டாக்டர் ஸுல்கிஃப்லி உறுதி அளித்தார்.
மலேசியாவில் புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் 2.50 ரிங்கிட்டிற்கு (70 காசு) விற்கப்படுகின்றன. சிறுவர்களைக் குறிவைத்து அவை குறித்து விளம்பரங்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்துணர்ச்சி இன்ஹேலர்கள் ஏற்கெனவே சீனாவில் உள்ள தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பிரபலமாக உள்ளது.