கோத்தா கினபாலு: வீட்டில் குடித்துக் கொண்டிருந்த தம்பதியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆடவர் தன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.
சாபாவின் சூக் பகுதியில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று இரவுவேளையில் இச்சம்பவம் நடந்தது. 16 மணி நேரம் கழித்து, தீக்காயங்களால் அந்த 41 வயது மாது உயிரிழந்தார்.
மரத்தால் செய்யப்பட்ட அவர்களின் வீடு, தீக்கு இரையாகும் வேளையில் தம்பதியின் 16 வயது மகள் தன்னுடைய இரு இளம் சகோதரர்களைக் காப்பாற்ற முயன்றார்.
இதையடுத்து அந்த 50 வயது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தை கொலை என்று காவல்துறையினர் வகைப்படுத்தி விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பழைய சாதத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ‘தாப்பாய்’ பானத்தைத் தம்பதியர் அருந்தியதாகவும் போதையில் அவர்களுக்கு இடையே சண்டை மூண்டதாகவும் கூறப்படுகிறது.
மனைவியைத் தான் கொளுத்திவிடுவதாக ஆடவர் மிரட்ட, அவ்வாறு செய்யுமாறு அந்த மனைவி சவால் விட்டார்.
அதையடுத்து மனைவி மீது ஆடவர் பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாக அறியப்படுகிறது.
தம்பதியரின் மூத்த மகள், பற்றி எரிந்துகொண்டிருந்த தன் அம்மாவின் உடல் மீதுள்ள நெருப்பை அணைக்க முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது.