மணிலா: சீன அரசாங்கம் எந்தவிதமான இணையத் தாக்குதல்களையும் பொறுத்துக் கொள்ளாது என பிலிப்பீன்சில் இருக்கும் சீனத் தூதரகத்தின் பேச்சாளர் திங்கட்கிழமை தெரிவித்தார்.
சீன உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி எந்தவொரு நாட்டையும் அல்லது தனிநபரையும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட அது அனுமதிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இணைய ஊடுருவிகள் சீனாவிலிருந்து பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் தனிப்பட்ட இணையத்தளம் உட்பட அரசாங்க இணையத்தளங்களில் ஊடுருவ முயன்றதாக பிலிப்பீன்ஸ் திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியது.
ஆனால், இணைய ஊடுருவிகளின் திட்டம் நிறைவேறவில்லை என அது மேலும் தெரிவித்தது.
பிலிப்பீன்சின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டில் இருக்கும் சீனத் தூதரகத்தின் பேச்சாளர் மேற்கூறியவாறு பதிலளித்தார்.
இணைய ஊடுருவிகள் எந்த நாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று பிலிப்பீன்ஸ் கூறவில்லை. ஆனால் சீன அரசுக்கு சொந்தமான யூனிகாமின் சேவைகளை ஊடுருவிகள் பயன்படுத்தியதை அது கண்டறிந்ததாகக் கூறியது.
இதுகுறித்து யுனிகாம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.