கியவ்: உக்ரேன் மீது இரண்டாம் நாளாக மேற்கொண்ட பெருமளவிலான தொடர் வானூர்தித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என்று உக்ரேன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ரஷ்யா ஏவிய 27 ஈரானிய வானூர்திகள் உக்ரேன் தலைநகர் முதற்கொண்டு 7 பகுதிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், உக்ரேனிய விமானப் படை அந்த 27 வானூர்திகளையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்தது.
உக்ரேனின் வினிட்சியா நகரில் ஒரு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அந்த வட்டார ஆளுநர் கூறினார்.
மேலும், உக்ரேனின் கிழக்கு, மத்தியப் பகுதியில் ரஷ்யா எட்டு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வியாழக்கிழமை அன்று ரஷ்யப் படையினர் வடகிழக்கு உக்ரேனை குறிவைத்து குடிமக்கள் கட்டுமானத்தை தாக்கியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தாக்குதல் நடைபெற்றதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் பற்றி மக்களுக்கு தகவல் தெரியாமல் இருக்கும் வண்ணம் ஐந்து உக்ரேனிய நகரங்கள், துணை நகரங்களில் உள்ள தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் தாக்கப்பட்டதாகக் கியவ் நகரில் அதிகாரிகள் விளக்கினர்.