ஜெருசலம்: மத்திய கிழக்கின் காஸா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் தான் மேற்கொண்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 90 துப்பாக்கிக்காரர்களை கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் புதன்கிழமை (மார்ச் 20) அன்று தெரிவித்தது.
அத்துடன், மேலும் 160 பேரைத் தான் கைதுசெய்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
காஸா பகுதியில் ஆகப் பெரிய மருத்துவமனையாக இருந்த அல் ஷிஃபா மருத்துவமனைதான் தற்பொழுது ஓரளவு செயல்பாட்டில் இருக்கும் சில சுகாதார பராமரிப்பு நிலையங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.
“கடந்த ஒரு நாளாக, எங்கள் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை துடைத்தொழித்துள்ளனர். அத்துடன், குடிமக்கள், நோயாளிகள், மருத்துவக் குழுக்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மருத்துவமனையில் உள்ள ஆயுதங்களை அடையாளம் கண்டுள்ளனர்,” என்று இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அந்த மருத்துவமனை மீதான தனது தாக்குதலை திங்கட்கிழமை அதிகாலை தொடங்கியது. அந்தத் தாக்குதலுக்கு தரைப்படைக்கு ஆதரவாக கவச வாகனப் படையும் அனுப்பப்பட்டதாக ராணுவம் கூறியது. அந்த மருத்துவமனையைத் துப்பாக்கிக்காரர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த வேவுத் தகவலின் அடிப்படையில் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.