ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுலாவேசி மாநிலத்தில் எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக ருவாங் எரிமலையிலிருந்து எரிமலைக் குழம்பு வழிந்தோடுவதுடன், கரும்புகை, சாம்பல் ஆகியவற்றை எரிமலை கக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த எரிமலை எந்நேரமும் வெடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அதிகாரிகள் விழிப்புநிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசுலாவேசித் தீவில் அண்மையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் அவற்றின் காரணமாக எரிமலைக் குமுறல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தோனீசியாவின் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.