வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் ஆக்லாந்தில் உள்ள அந்த மேய்ச்சல் நிலத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அந்த முதிய தம்பதி மாண்டு கிடக்கக் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஆண் ஆடு ஒன்று அங்கே காணப்பட்டதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
அந்த ஆடு வேறொருவரையும் தாக்கிக் காயப்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
“காவல்துறை ஊழியரையும் அந்த ஆடு தாக்க முனைந்தது.
“நிலைமையை மதிப்பீடு செய்து அந்த ஆட்டை அங்கேயே சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டது.
“பின்னர் அதிகாரி ஒருவர் அதைச் சுட்டுக் கொன்றார்,” என்று காவல்துறை கூறியது.
உயிரிழந்த முதிய தம்பதி 80 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் அந்த ஆடு தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்றும் நெருங்கிய உறவினர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகக் கூறிய காவல்துறை, ஏப்ரல் 19ஆம் தேதி உடற்கூராய்வு மேற்கொள்ளப்படும் என்று சொன்னது.
நியூசிலாந்தில் ஐந்து மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அங்கு ஏறத்தாழ 25 மில்லியன் ஆடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.