வாஷிங்டன்: இஸ்ரேல் பாய்ச்சிய ஏவுகணைகள் ஈரானைத் தாக்கியதாக, ஏப்ரல் 18ஆம் தேதி பின்னிரவில் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அது இந்தத் தகவலை வெளியிட்டது.
முன்னதாக, சிரியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. அதற்குப் பதிலடியாக ஈரான் ஆளில்லா வானூர்திகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கியது.
ஈரானின் பதிலடிக்குச் சில நாள்கள் கழித்து இஸ்ரேல் ஏவுகணைகளைப் பாய்ச்சிய தகவல் வெளிவந்துள்ளது.
அதேவேளையில், நாட்டின் மத்திய பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ஃபகான் நகர விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று அது குறிப்பிட்டது.
இஸ்ஃபகான் பகுதியில், நட்டான்ஸ் அணுசக்தி நிலையம் உட்பட ஈரானின் அணுசக்திக் கூடங்கள் சில அமைந்துள்ளன.
நட்டான்ஸ் அணுசக்தி நிலையம், ஈரானின் யுரேனியச் செறிவூட்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
இஸ்ஃபகான், ஷிராஸ், டெஹ்ரான் ஆகிய நகரங்களின் வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
டெஹ்ரானின் இமாம் கொமேனி அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 19ஆம் தேதி காலை ஈரானிய வான்வெளியில் பறந்துகொண்டிருந்த எமிரேட்ஸ், ஃபிளைதுபாய் நிறுவனங்களின் சில விமானங்கள் உடனடியாக வேறு பாதையில் திருப்பப்பட்டதாக ஃபிளைட்ரேடார்24 இணையத்தளம் பதிவிட்டுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி, ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி இஸ்ரேலைத் தாக்கியது. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய எல்லையை நெருங்குமுன் வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதற்குப் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் கூறியிருந்தது.
இனி எந்தவிதமான ராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இஸ்ரேலைத் தடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 18ஆம் தேதி ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்திடம் ஈரான் வலியுறுத்தியது.
இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையிலான போர் மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் விரிவடைவதாகக் கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.