வாஷிங்டன்: ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட இரவு நேரத் தாக்குதலை அந்நாடு அடக்கி வாசிக்கும் விதமாக அதுகுறித்து தான் விசாரித்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்தத் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலுக்கு தொடர்பிருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.
அந்தத் தாக்குதல் குறித்து என்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிராப்டோல்லாஹியன், அந்த வானூர்திகள் ஈரானிலிருந்து செயல்பட்டதாகவும் அவை சில நூறு மீட்டர் தூரம் பறந்தபின் வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.
“அவை நமது பிள்ளைகள் விளையாடும் பொம்மைகள் போன்றவை, வானூர்திகள் அல்ல,” என அவர் சப்பைக்கட்டு கட்டினார்.
“அவற்றுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பிருப்பதாக எங்களுக்கு நிரூபிக்கப்படவில்லை,” என்று கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சர், அந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக விளக்கினார். மேலும், இதன் தொடர்பில் ஊடகங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விவரித்த ஈரானிய ஊடகங்களும் அரசு அதிகாரிகளும் ஈரானில் சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்டதாகக் கூறினர். அவை இஸ்ஃபகான் நகரில் நடந்தன என்றும் ஈரானிய தற்காப்பு ஆயுதங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதால் ஏற்பட்டன என்றும் கூறப்பட்டது. அந்த வானூர்தித் தாக்குதல் இஸ்ரேல் மேற்கொண்டது அல்ல என்றும் அவை ஊடுருவல்காரர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினாலோ அல்லது ஈரானிய நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டாலோ ஈரானின் பதிலடி உடனடியாகவும் அதிகபட்ச அளவிலும் இருக்கும் என்று ஈரானிய வெளியறவு அமைச்சர் ஹொசைன் அமிராப்டோல்லாஹியன் தெளிவுபடுத்தினார்.
“அப்படி இல்லையெனில் இது முடிந்துபோன ஒன்று,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சொன்னார்.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இஸ்ஃபகான் நகருக்கு அருகே உள்ள அந்நாட்டு ஆகாயப் படைத் தளத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது. எனினும், அது முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பகுதியையும் தாக்கவோ பெரிய அளவிலான சேதத்தை விளைவிக்கவோ இல்லை என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.