ஒசாகா: ஜப்பானில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் ஆண் என நினைக்கப்பட்ட 12 வயது நீர்யானை பெண் எனத் தெரியவந்துள்ளது.
ஒசாகாவில் உள்ள அந்த விலங்கியல் தோட்டம் அதன் இணையப்பக்கத்தில் இதனை அறிவித்தது.
ஜென்-சான் என்ற பெயர் கொண்ட அந்த நீர்யானை, 2012 மார்ச் மாதம் பிறந்தது. 2017ல் அதற்கு ஐந்து வயதாக இருந்தபோது மெக்சிகோவில் உள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றிலிருந்து ஒசாகாவுக்கு மாற்றப்பட்டது.
ஜென்-சானின் பாலினம் ஆண் என மெக்சிகோ விலங்கியல் தோட்ட ஊழியர்கள் கூறினர். அந்த நீர்யானையை ஒசாகாவுக்குக் கொண்டு வருவதற்கான ஆவணங்களிலும் அது ஆண் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
2017 ஆகஸ்ட்டில் அந்த நீர்யானைக்கு ஜென்-சான் என பெயரிட ஒசாகா விலங்கியல் தோட்டம் முடிவு செய்தது. அங்கு வருபவர்களுக்கும் ஜென்-சான் தெரிந்த முகமாகிவிட்டது.
பொதுவாக நீர்யானைகள் ஏறக்குறைய 10 வயதில் பாலியல் முதிர்ச்சி அடையும். ஆனால், ஆண் நீர்யானைகளிடம் காணப்படும் நடவடிக்கைகள் ஜென்-சானிடம் கண்டறியப்படாதது விலங்கியல் தோட்ட ஊழியர்களை யோசிக்க வைத்தது.
ஜென்-சான் பெரிய உருவத்தைக் கொண்டிருப்பதால், அதன் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டு அதன் பாலினத்தை உறுதிப்படுத்துவது சிரமமாக இருந்தது.
எனவே ஒசாகா விலங்கியல் தோட்டம், வெளிப்புற ஆய்வு அமைப்பு ஒன்றிடமிருந்து மரபணு பரிசோதனையைக் கோரியது. ஜென்-சான் பெண் நீர்யானை என்பது ஏப்ரல் 16ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.