கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவின் ஜார்ஜ் நகரில் உள்ள பலமாடிக் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இச்சம்பவம் திங்கட்கிழமை (மே 6) பிற்பகல் நேரத்தில் நடந்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த கட்டடம் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடமாகும்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 20 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 51 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
மீட்புப்பணிக்கு உதவும் விதமாக ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்பட்டன.
“இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் குரல்கள் கேட்கின்றன, அவர்களை விரைவில் மீட்போம். கட்டடம் மோசமாக இடிந்து விழுந்துள்ளது, அதனால் மீட்புப்பணிகளில் சிக்கல்கள் எழுந்துள்ளன” என்று மீட்புக்குழுவின் தலைமை அதிகாரிகள் கூறினர்.
கட்டடம் இடிந்து விழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.