தைபே: தைவானை ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது.
அதனையடுத்து, அந்நாட்டு அரசியலமைப்பு நடைமுறையின்படி, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு அமைச்சரவை ராஜினாமா செய்யும் என அந்நாட்டுப் பிரதமர் சென் சியென்-ஜென் செவ்வாய்க்கிழமை கூறினார்.
அவர் தேதி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், ஜனவரி 13 ஆம் தேதி அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றம் பிப்ரவரி 1ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெரும்பான்மையை இழந்தது.
அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் பிரதமரை நியமிப்பார். பின்னர், பிரதமர் அமைச்சரவையை உருவாக்குவார்.