கீவ், உக்ரேன்: உக்ரேனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் புதிய போக்குவரத்து நடுவத்திற்கு வழி அமைக்க ரயில், பேருந்து நிலையங்களுக்கு இடையிலான இடிபாடுகளையும் மண்ணையும் அகற்றும் பணி நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யப் படைகளுடன் நடந்த சண்டையில் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரம் கடுமையாகச் சேதமுற்றது. அரசாங்க நிதியுதவியுடன் மீண்டும் கட்டப்படும் ஆறு பகுதிகளில் அதுவும் ஒன்று.
“இங்குத் திரும்பிவரவேண்டிய அனைவருக்காகவும் இங்கு எதிர்காலத்தை அமைக்கவேண்டிய ஒவ்வொரு குழந்தைக்காகவும் நாம் போராடுகிறோம்,” என்று மேயர் யுரி போவா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“அனைத்தையும் மீண்டும் சரிசெய்யவேண்டும். நூலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் தொடங்கவேண்டும்,” என்றார் அவர்.
உக்ரேன் உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கீவில் உள்ள அதிகாரிகள் கோடிகாட்டியுள்ளனர். அதற்கு பில்லியன்கணக்கில் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் தணியும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் உக்ரேன் ரஷ்யாவின் புதிய தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துவருகிறது.
மாஸ்கோ, மக்கள் அதிகம் உள்ள இடங்களில் பெரிய அளவிலான ஆகாயத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ட்ரொஸ்டியனெட்ஸ் நகருக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு நகரம் ஒக்திர்கா. அந்த நகரமும் ரஷ்ய வெடிகுண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகரங்களுக்கு மீண்டும் புத்துயிரூட்டும் சொகுசான வாய்ப்பு உக்ரேனுக்குத் தற்போது கிடையாது என்று ஒக்திர்கா மேயர் பாவ்லோ குஸ்மெங்கோ கூறினார்.
ட்ரொஸ்டியனெட்ஸ் நகருக்கான திட்டங்களை சென்ற ஆண்டு வெளிப்படையாகக் குறைகூறிய திரு குஸ்மெங்கோ, வீடுகளையும், முக்கிய உள்ளமைப்புகளையும் மறுசீரமைப்பதில் மட்டுமே கவனம் இருக்கவேண்டும் என்று கூறினார்.
கிடைக்கக்கூடிய மற்ற நிதி ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்றார் அவர்.