தோக்கியோ: பசிபிக் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் இருந்த பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியைக் கடித்தார்.
இதனால், விமானம் தரையிறங்க வேண்டிய சூழல் ஜப்பானில் ஏற்பட்டது.
ஜப்பானின் ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் விமானம் தோக்கியோவிலிருந்து அமெரிக்காவின் சியேட்டல் நகரத்திற்குப் போவதாக இருந்தது.
இருப்பினும், விமான ஊழியரின் கையைப் பயணி கடித்ததை அடுத்து விமானம் ஹனேதா விமான நிலையத்திற்குத் திரும்பியது.
விமானம் தரையிறங்கியதும் அமெரிக்கர் என்று நம்பப்படும் அந்த 55 வயது ஆடவர், காயம் விளைவித்ததன் சந்தேகத்தில் தோக்கியோ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் ஜனவரி 16ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இதற்கிடையே, ஆடவர் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
விமானம் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தன் மீதான குற்றத்தை அந்த ஆடவர் மறுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
தூக்க மாத்திரை ஒன்றை உட்கொண்டதால் நடந்தது தனக்கு ஞாபகமில்லை என ஆடவர் காவல்துறையிடம் கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.