சிங்கப்பூர் ஆயுதப்படையின் 143 ஆகாயப்படைப்பிரிவு சிறந்த போர்வீரர் படைப்பிரிவு எனும் அங்கீகாரத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக பெற்றுள்ளது. சிங்கப்பூர் ஆயுதப்படையின் சிறந்த பிரிவு போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்தப் படைப்பிரிவு இதுவரை [Ϟ]ஏழு முறை வெற்றியைக் கைக்கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் போர்ப்படை பொறியாளராக சேவையாற்றி வரும் 31 வயது கார்த்திகன் அ அன்பழகன், தொடர்ந்து நான்காவது ஆண்டாக தனது படைப்பிரிவு இந்த வெற்றியைத் தக்கவைத்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டார். இந்த நான்கு முறையும் தானும் அதில் ஓர் அங்கம் வகித்ததில் அவருக்கு மகிழ்ச்சி.
படைப்பிரிவின் வான்வழி பணிகள் சீராகவும் சுமூகமாகவும் நடைபெறுவதில் கார்த்திகனின் பொறுப்பும் உள்ளது. தளவாடப் பிரிவில் இருக்கும் இவர் போர் விமானம் புறப்படுவதற்கு முன் அதை பரிசோதித்து, கோளாறுகளைச் சரிசெய்ய வேண்டும். விமானம் பாதுகாப்பாக புறப்படுவதையும் அதன் பின் தரை இறங்குவதையும் கண்காணிக்க வேண்டும். இவர் போர்ப்படை விமானிகளுக்கும் தனது சக பணியாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாய் விளங்குகிறார்.
போர்ப்படை விமானிகளும் தன்னைப் போன்ற பொறியாளர்களும் ஒன்றிணைந்த குழுவாக பல பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம் என்றார்.
தளவாடக் குழுவினர், போர்ப்படை விமானிகளுடன் இணைந்து பணிபுரிவது கார்த்திகன் தன் பணியில் விரும்பும் ஒன்று.
சில நேரங்களில் ஆகாயப்[Ϟ]படையில் பணிபுரிவது சவால்மிக்கதாக இருக்கிறது என்ற அவர், வெளிநாட்டுப் பயிற்சியைக் குறிப்பிட்டார். இத்தகைய பயிற்சிகள் புதிய திறன்களையும் அனுபவங்களையும் பெற உதவுகிறது என்றார்.
இந்தியாவில் பங்கெடுத்த ஆறரை வார கூட்டு ராணுவப் பயிற்சியின்போது, இந்திய ஆகாயப்படை வீரர்களுடன் கைகோத்து முதல்முறையாக மேற்கொண்ட பயிற்சியில் புதிய நுணுக்கங்களைக் கற்றது பற்றிக் குறிப்பிட்டார். “கைப்பேசிகூட பயன்படுத்தாமல், முழுக் கவனத்தையும் பயிற்சிகளிலேயே செலுத்தினோம். சிறிது நேரத்திலேயே எவ்வாறு ஒரு போர்விமானத்தை விரைவாக சோதனை செய்யமுடியும் என்பதையும், பல பணியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை எளிதாக கையாளும் முறைகளையும் கற்றுக்கொண்டோம்,” என்றார்.
சில மாதங்கள் அயல் நாட்டில் வேலைப் பயிற்சிகளை மேற்கொள்வது அவருக்கு சுவாரஸ்யமானதாக இருந்தாலும் பெற்றோரையும் தம்பியையும் பிரிந்திருப்பதுதான் சற்று சிரமமாக இருக்கிறது.
சிறு வயதிலிருந்தே விமானங்களில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் கார்த்திகன் அடிப்படை ராணுவ பயிற்சியின்போதே சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் பணிபுரிய வேண்டுமென்ற இலக்கோடு இருந்தார். பயிற்சி முடிந்த கையோடு சிங்கப்பூர் ஆகாயப்படையில் முழுநேரப் பணியாளராகச் சேர்ந்துவிட்டார்.
கார்த்திகனின் பெற்றோர் இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். கார்த்திகனின் தம்பியும் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். எதிர்காலத்தில் சிங்கப்பூர் ஆகாயப்[Ϟ]படையில் பணிபுரியும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க விரும்பும் கார்த்திகன், அவர்களுக்குத் தேவைப்படும் பயிற்சிகளை அளித்து ஆகாயப்படையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளார்.