சிங்கப்பூர் அறிவாலயம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து ‘சிங்கப்பூர் கதைகள் படக் காட்சி 2023’ குறும்படங்களைப் பெருமையுடன் வழங்கியது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வடிவமைப்புப் பள்ளி மின்னிலக்க திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகள் பட்டயக் கல்வி பயிலும் மாணவர்களுடன் 10வது ஆண்டாக அறிவாலயம் ஒருங்கிணைந்து குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன.
உள்ளூர் தயாரிப்புகளில் இருந்து ஊக்கம் பெற்று சிங்கப்பூர் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் விழுமியங்களுடன் உருவாகியுள்ளன தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று குறும்படங்கள்.
‘ராகங்கள் பதினாறு’ எனும் தலைப்பில் படைக்கப்பட்ட குறும்படம் முற்றிலும் தமிழில் உள்ளது. குடும்பச் சூழலில் ஏற்படும் மாற்றங்களை இளம் பெண் ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது இப்படம்.
வெவ்வேறு மொழிகள் பேசும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இந்தத் தமிழ் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்கள். படத் தயாரிப்பு பயிலும் இவர்கள் தங்கள் இறுதி ஆண்டு ஒப்படைப்பாக இந்தக் குறும்படத்தைத் தயாரித்துள்ளனர்.
‘ராகங்கள் பதினாறு’ குறும்படத்தில் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநராகவும் பொறுப்பேற்றிருந்தார் முத்தையா கீர்த்திவாசன். இவருடன் தயாரிப்பாளரும் முதல் துணை இயக்குநராகவும் ஜெனிஸ் லிம் ஹுய் பணியாற்றினார். இவர்களுடன் இணைந்து செயல்பட்டனர் 10 தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள்.
“பல எதிர்பாராத சவால்களால் படப்பிடிப்பு வேலைகள் அதிகம் தாமதம் அடைந்தன. என் சக மாணவர்கள் அவ்வப்போது மனம் தளர்ந்தனர். இன்னல்கள் பல கடந்து எங்கள் குறும்படம் சிங்கப்பூர் கதைகள் காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது அதீத பெருமையாக உள்ளது.
இயக்குநர் கீர்த்திவாசனும் நானும் மனம் தளராது எங்கள் குழுவை அன்றாடம் ஊக்குவித்தோம். அனைவரும் தங்கள் முழு முயற்சியை இந்த குறும்படத்திற்கு செலுத்தினர். இந்த குழு முயற்சியால் தான் எங்களுக்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது,” என்று ‘ராகங்கள் பதினாறு’ படத்தை தயாரித்த மாணவர் குழு சார்பாக பகிர்ந்துகொண்டார் 21 வயது ஜெனிஸ் லிம்.
‘ராகங்கள் பதினாறு’ குறும்படத்துடன் தெமாசெக் மாணவர்கள் தயாரித்த ‘கொண்டோ காப்ஸ்’, ‘ட்ரான்ஸ்ஃபெரென்ஸ்’ ) ஆகிய மூன்று குறும்படங்கள் ‘சிங்கப்பூர் கதைகள்’ படக் காட்சி நிகழ்வில் படைக்கப்பட்டன.
2014ல் தொடங்கிய ‘சிங்கப்பூர் கதைகள்’ எனும் திட்டம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு தமது செயல்திறனை வெளிப்படுத்த சிறந்த தளத்தை வழங்கி வருகிறது.
ஜூலை 7ஆம் தேதியிலிருந்து இம்மூன்று குறும்படங்கள் சிங்கப்பூர் கண்டுபிடிப்பு நிலையத்தின் திரையரங்கில் இலவசமாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.