இசை எப்பொழுதும் தங்கள் மகனின் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமென்று பவித்திரனின் பெற்றோர் விரும்பினர். பவித்திரனின் கலையார்வத்திற்கு வித்திட்ட அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள் என பல வகைகளில் கலையோடு தொடர்பில் உள்ளனர்.
ஐந்து வயதில் திரு துரைசுவாமி ராஜகோபாலிடமிருந்து மிருதங்கம் கற்றுக்கொண்ட பின்னர் பவித்திரன் ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ நுண்கலைக் கழகத்தில் 2014ஆம் ஆண்டில் அரங்கேற்றத்தை முடித்தார். மிருதங்கத்திற்கு அப்பாற்பட்டு பவித்திரன் தொடக்கப்பள்ளி காலத்திலும் பள்ளியின் இசைக்குழுவில் சேர்ந்து மேற்கத்திய தாள வாத்திய கருவிகளைக் கற்றுத்தேர்ந்தார்.
பவித்திரனின் இசைப் பயணம் சிங்கப்பூர் கலைப் பள்ளியில் ஆறு ஆண்டுகளுக்குத் தொடங்கியது. ஆறு ஆண்டுகளில் பவித்திரன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். மேற்கத்திய தாள வாத்திய கருவிகளின் நுணுக்கங்களை ஆழமாக அறிந்துகொண்டது மட்டுமின்றி அவர் டிரம்ஸ் வாசிக்கவும் லத்தீன் தாள வாத்தியமும் கற்றுக்கொண்டார்.
கலைப் பள்ளியில் பயின்றபோது பவித்திரனின் ஆசிரியர்கள் அவருக்கு உத்வேகத்தை அளித்தனர். ஆசிரியராகப் பணிபுரியும் விழுமியங்களைத் தனக்கு இசையைக் கற்பித்த ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பவித்திரன், தானும் பிற்காலத்தில் தனது மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்று விரும்பினார்.
தேசிய கல்விக் கழகத்தில் சேர்ந்த பின்னர், சக மாணவர்களோடும் பேராசிரியர்களோடும் பங்கேற்ற கலந்துரையாடல்கள் எப்பொழுதுமே இசை எவ்வாறு பள்ளிகளில் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவும் என்பதை ஒட்டியே இருக்கும் என்ற பவித்திரன், இக்காலத்து இளையர்களின் விரல் நுனியில் இசை வளங்கள் மிகுந்து கிடக்கின்றன என்றார்.
தன்னைப் போல் இசை மீது அதிகளவில் நாட்டம் கொண்ட மாணவர்களுடன் இணைந்துகொண்ட பவித்திரன் இளங்கலை மாணவராக இருந்தபோது பல்கலைக்கழகத் தங்குவிடுதியின் இசைக்குழுவில் ஈராண்டுகள் உறுப்பினராக இருந்ததோடு தங்குவிடுதியின் காற்பந்துக் குழுவுக்குத் தலைவராகவும் செயலாற்றி வந்தார்.
தேசிய கல்விக் கழகம், ஆசிரியராகவிருக்கும் மாணவர்களைத் தயார்படுத்துவதற்கு வேலைப் பயிற்சித் திட்டத்தை மாணவர்களின் பாடத்தில் ஓர் அங்கமாக வைத்துள்ளது. அதன் மேற்கொண்ட பவித்திரன் தான் சென்றிருந்த பள்ளியில் மாணவர்கள் தங்களை வெளிப்படுத்த மிகவும் சிரமப்பட்டதை உணர்ந்தார். இசை வகுப்பின்போது மாணவர்கள் பிற மாணவர்கள் முன் நின்று பாடுவதற்குத் தயங்கியதைக் கண்ட பவித்திரன் அதற்குத் தீர்வு காணும் விதத்தில் பள்ளியுடன் இணைந்து இசை மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் திட்டங்களை கொண்டு வந்தார்.
இன்ஸ்டகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகத் தளங்கள் உதயமானதிலிருந்து சிறுவர்கள் பல்வேறு வகைகளில் இசையை அணுகலாம் என்று நம்புகிறார் பவித்திரன். மாணவர்களுக்கு இசை ஆர்வத்தை விதைக்கும் பவித்திரன் மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான இசையைத் தொடர்புபடுத்தி அவர்களின் கற்றலை எளிதாக்கலாம் என்கிறார்.
இசைப் பிரியரான பவித்திரன், ஏ.ஆர். ரகுமான் பாடல்களை விரும்பிக் கேட்பதுண்டு. பள்ளிக்கு அப்பாற்பட்டு இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனும் பரிணாமங்களை எடுக்கும் பவித்திரன், ஸ்பாட்டிஃபை இசைத் தளத்தில் மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரே குரல்’ எனும் பாடல் கொள்ளை நோயின்போது அயராமல் உழைத்த முன்னணி தொழிலாளர்களுக்கு சமர்ப்பணமாக விளங்கியது.
பவித்திரன் அண்மையில் தமிழ் இலக்கிய நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிம்பொனிக் கவிதையை இயற்றினார். இசை படமாக்கப்பட்ட அந்தக் கவிதையானது தற்போது அனைத்துலகத் திரைப்பட விழாவில் மதிப்பிடப்படுகிறது.