எதிர்காலத்தில் சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துக்கூறும் திரைப்படங்கள் வரவேண்டும் என்கிறார் இளையர் நிரஞ்சன் பென்னட்.
“திரைப்படம் என்பது ஒரு பகுதியின் கலாசாரத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதுதான். சிங்கப்பூர் வளமான பல்லினக் கலாசாரத்தைக் கொண்டது. அதை உலகிற்கு எடுத்துக்காட்டும் படங்கள் எதிர்காலத்தில் வெளிவரும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
‘ஸ்கேப்’ எனும் அரசு சாரா நிறுவனம் நடத்தும் தேசிய இளையர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பாளருக்கான விருதைப் பெற்றுள்ளார் நிரஞ்சன் பென்னட்.
ஏறத்தாழ 300 திரைப்படங்கள் நியமனம் பெற்று, அவற்றில் 60 திரைப்படங்கள் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இவர் ‘டிராகன் ஃபிளை’ எனும் ஹோக்கைன்-சீன மொழித் திரைப்படத்திற்காக இவ்விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலில் உளவியல் துறை, ஆங்கில இலக்கியத் துறை, நாடகத்துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள இந்தியக் கல்லூரி ஒன்றில் சேர்ந்த இவர், நாடகம்மீது ஏற்பட்ட ஈர்ப்பால் படிப்பைப் பாதியில் விட்டு சிங்கப்பூரில் திரைத்துறை பட்டயப் படிப்பில் சேர்ந்தார்.
லாசால் கலைக் கல்லூரியில் ஒளிபரப்புத் துறையில் பட்டயப் படிப்பும் திரைப்பட உருவாக்கத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.
பட்டப்படிப்பில், எழுத்து, இயக்கம், ஒலி உருவாக்கம் எனும் மூன்று துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்த இவர், “இதுதான் நான் முதலில் திரைப்படத்திற்கென வாங்கும் பெரிய விருது,” எனப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.
“ஒலி வடிவமைப்பு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஆனால் சிறந்த ஒலி வடிவமைப்பு ஒரு திரைப்படத்தின் தாக்கத்தைப் பன்மடங்கு அதிகரிக்கும்,” என்கிறார் நிரஞ்சன்.
‘டிராகன் ஃபிளை’ 1980களில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டது. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவைக் காட்டும் படம் என்பதாலும், சில சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாலும் ஒலி வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது.
இத்திரைப்படத்தில் வசனங்களை நேரடியாகப் பதிவு செய்ததால், சுற்றுப்புற சத்தத்தை நீக்குவது, சண்டைக் காட்சிகளில் சத்தத்தை அழுத்தமாகக் கொடுப்பது, நடத்தல், பொருள்களை உடைத்தல் போன்ற காட்சிகளுக்கு நானே ஒலி வடிவமைக்க வேண்டிய நிலை என இந்த பணி பெரும் சவாலாகவே அமைந்தது,” என்று குறிப்பிட்டார் நிரஞ்சன்.
“திரையில் பேசும் மொழி எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒலி வடிவமைத்தது ஒரு சிறப்பான அனுபவம்,” என்று அவர் சொன்னார்.
அடிப்படையில் இவர் ஒரு திரைப்பட எழுத்தாளரும், கதாசிரியரும் ஆவார். என்றாலும், கலைத்துறையில் இருப்பவர்கள் பல்துறை வித்தகர்களாக இருப்பது அவசியம் என்று உணர்ந்ததால், ஒலி வடிவமைப்பிற்கான மென்பொருள்களைக் கற்று, இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்.
தனக்கு இக்கருத்தை வலியுறுத்தி ஊக்குவித்த ஆசிரியர் நிகில் வுட்போர்டுக்கும் ஒலி வடிவமைப்பில் உதவிய நண்பரும் இத்திரைப்படத்தின் தொகுப்பாளருமான அஸ்வினுக்கும் நன்றி தெரிவித்தார் நிரஞ்சன்.
தன்னைப்போல திரைத்துறையில் கால்பதிக்க எண்ணும் இளையர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சாமல், தொடர்ந்து உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் நல்ல திரைப்படத்திற்கான கதையை எழுதவும் எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறினார் நிரஞ்சன்.