நிதித்துறை நிர்வாகியான முன்னதாகப் பணியாற்றிய புவனேஸ்வரி தனகோபால், 37, சமச்சீரான வாழ்க்கை முறையை விரும்பினார். கல்வித் தகுதியை மேம்படுத்தவும் குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்தவும் விரும்பினார்.
தகவல் தொழில்நுட்பத்தில் பட்டயக் கல்வி முடித்திருந்த திருவாட்டி புவனேஸ்வரி, பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக நிதித்துறை, கணக்காய்வுத் துறையைப் படிக்க முற்பட்டார். ஆனால் நேரத்தைச் சரியாக நிர்வகிக்க இயலாமல் பட்டப்படிப்பை இவர் முழுமையாக முடிக்க இயலவில்லை. விளம்பரத்துறை, மனிதவளம் எனப் பல்வேறு துறைகளில் முயன்றார்.பருவக் கல்வித்துறைக்கு துணிச்சலாகத் தாவினார்.
திருவாட்டி புவனேஸ்வரி இப்போது பாலர் பராமளிப்பு நிலைய தலைமை ஆசிரியர். 2016ல் உதவி ஆசிரியராக ‘கிரீன்லேண்ட் சைல்டுகேர் @ ஃபெர்ன்வேல்’ பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் பணியில் அவர் சேர்ந்தார். 2017ல் அவர் ஆங்கில ஆசிரியர், 2021ல் மூத்த ஆங்கில ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று படிப்படியாக உயர்ந்தார்.
இவ்வாண்டு பள்ளி முதல்வராகப் பொறுப்பேற்ற திருவாட்டி புவனேஸ்வரி, 29 ஆசிரியர்களுக்கும் 132 பிள்ளைகளுக்கும் பொறுப்பேற்கிறார். அக்டோபர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை புவனேஸ்வரி, ஆரம்ப பாலர் பருவ தலைமைத்துவத் துறையில் பட்டயம் பெற்று தலைமைத்துவ நிர்வாகம், மக்கள் நிர்வாகம் மற்றும் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொண்டார்.
திருவாட்டி புவனேஸ்வரியைப் போலவே குமாரி வ. ஹேமாரூபினி, 28, மற்றொரு துறையிலிருந்து ஆசிரியர் துறைக்கு மாறுகிறார். கணக்காய்வுத் துறையில் முன்னதாக பணிபுரிந்த குமாரி ஹேமா, தற்போது தேசிய கல்வி நிலையத்தில் சிறப்புத் தேவை ஆசிரியராக தகுதிபெறுவதற்குப் பயின்று வருகிறார்.
நல்ல நோக்கத்துடன் ஏதேனும் செய்து சமூகத்திற்கு பங்களிக்க ஆசைப்படும் குமாரி ஹேமாவின் கற்பித்தல் பயணம், ஓய்வு நேரத்தில் மதியிறுக்கம் கொண்ட தம் உறவினர் மகனுக்கு கற்றுக்கொடுத்ததில் தொடங்கியது. அப்போது அவர், கற்பித்தல் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள ‘ஜெனசிஸ்’ சிறப்புத் தேவைப் பள்ளியில் தொண்டூழியம் புரிந்தார். அதே பள்ளியில் சிறிய பயிற்சி வகுப்பு ஒன்றையும் குமாரி ஹேமா மேற்கொண்டார்.
ஓவியம், செயற்கைக் களிமண் ஆகியவற்றை குமாரி ஹேமா பயன்படுத்தி கணக்குப்பாடங்களைக் கற்பித்தார். இத்தகைய கற்றல் உத்திகள் பயனளித்ததைக் கண்டது திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறுகிறார். “நபில் என்ற என் மாணவன் தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதுடன் கணக்குப்பாடத்தில் ஆக அதிக அளவில் முன்னேறிய மாணவன் என்ற அங்கீகாரத்தையும் பெற்றான்,” என்று பெருமிதம் ததும்பிய குரலில் கூறினார்.
இந்த வெற்றியும் குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும் குமாரி ஹேமாவுக்குத் தான் சார்ந்திருந்த தொழிலை மாற்றும் துணிச்சலைத் தந்தது. அலுவலக வேலைக்கும் ஆசிரியர் பணிக்கும் இடையிலுள்ள வேறுபாடு அதிகம் என்பதால் தொடக்கத்தில் சற்று பயந்திருந்ததாகக் கூறுகிறார். இருந்தபோதும் அவர், தன்னைத் திடப்படுத்திக்கொண்டு முன்னேற்பாடுடன் ஆசிரியருக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்று அதில் வெற்றி பெற்றார்.
குறைபாடு உள்ள சிறார்களை சமூகத்தில் ஒருங்கிணைக்க உதவும் சிறப்புத் தேவை ஆசிரியர் பணிக்கு ஆர்வம், முனைப்பு, பொறுமை தேவைப்படுவதாகக் கூறுகிறார் இந்தப் பயிற்சி ஆசிரியர். இதில் மாணவர்களின் வெற்றி என்பது இறுக்கமான வரையறைகளால் அறுதியிட முடியாத என்று கூறிய குமாரி ஹேமா, சராசரி மதிப்பெண்ணான ‘சி’க்காகவும் ஒரு மாணவருக்கு ஊக்கம் தரும்போது அவருக்கு உழைக்கும் ஆர்வம் தொடர்ந்து நீடிக்கும் என்றார்.
சிறப்புத் தேவை உடையோரை சமூகத்தில் ஒருங்கிணைப்பது குறித்த தம் அறிவை தொடர்ந்து ஆழப்படுத்த குமாரி ஹேமா விரும்புகிறார்.