சிங்கப்பூரின் முதல் தமிழ் முக்கோண விவாதப் போட்டியான ‘சொற்கனல் 2023’ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.
சிங்கைத் தமிழ்ச் சங்க இளையர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ர தினகரன்.
திரு வடிவழகன் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவைத்து சுவாரசியமாக போட்டியை வழிநடத்தினார். நடுவர்களாக திரு ஜீவா கோபால்கிருஷ்ணன், திரு செந்தில் அழகப்பன், திருவாட்டி ராஜராஜ ஹேமலதா ஆகியோர் செயலாற்றினர்.
முதல் சுற்றான தயாரித்துப் பேசும் சுற்றில் ‘இன்றைய சூழலில் இளையர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது பொருளாதாரமா? கல்விச் சுமையா? குடும்பப் பொறுப்புகளா?’ என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதித்தனர்.
சிறப்பு அம்சமாக படவில்லைகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இளையர்களுக்குப் பெரும் சவால் பொருளாதாரமே என சிங்கப்பூர் மேலாண்மைக் கல்வி நிலைய அணியும் (எஸ்ஐஎம்) கல்விச் சுமையே என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக அணியும் (என்டியு) குடும்பப் பொறுப்பே என சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக அணியும் (என்யுஎஸ்) வாதிட்டன.
கல்வி, குடும்பப் பொறுப்புகள் இரண்டையும் சமாளிக்கத் தேவைப்படுவது செல்வமே எனவும் ‘எஸ்ஐஎம்’ அணி வாதிட்டது.
பொருளாதாரம், கல்வியைவிட ‘தோற்றால் குடும்பம் பாதிப்படையுமே’ என்ற அச்சமும் திருமணம் போன்ற குடும்ப பொறுப்புகளுமே இளையர்களை அதிகம் முடங்கச் செய்வதாக வாதிட்டனர் ‘என்யுஎஸ்’ மாணவர்கள்.
இரண்டாம் சுற்று உடனடி விவாதச் சுற்று. தயாரிக்க ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில் இரு நிமிட வாதங்கள் சூடாக நடந்தேறின. எதிரணி வாதம் செய்யும்போது மறுகருத்துத் தெரிவிக்கவும் அணிகளுக்கு ஒன்றரை நிமிடங்கள் வழங்கப்பட்டன.
நெருக்கமான போட்டியில் ‘என்யுஎஸ்’ முதல் பரிசை வென்றது. இரண்டாம் நிலையில் ‘என்டியு’ அணியும் மூன்றாம் நிலையில் ‘எஸ்ஐஎம்’ அணியும் வெற்றிபெற்றன.
சிறப்புப் பேச்சாளர் விருதை ‘என்டியு’ பேச்சாளர் சுப்பிரமணியன் அழகப்பன், 22, வென்றார்.
போட்டியின் மற்றோர் அங்கமாக சமூக ஊடகப் போட்டியும் நடைபெற்றது.
‘தற்போதைய காலகட்டத்தில் அதிகம் மதிக்கப்படுவது கல்வியா? பணமா?’ என்ற தலைப்பில் ஒரு நிமிடக் காணொளிகளையும் மாணவர்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். இதில் மூன்று வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.