சிங்கப்பூரில் டிசம்பர் 2 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கான உலகத் தரைப்பந்து போட்டிகள் 2023ல், சிங்கப்பூர் அணியின் கோல்கீப்பர் ஷசானா நூர், 19, சிறப்பாக விளையாடி அணிக்கு வலுசேர்த்தார்.
டிசம்பர் 7ஆம் தேதி இடம்பெற்ற ஸ்லோவாக்கியாவுடனான ஆட்டத்தில் சிங்கப்பூரின் ஆட்ட நாயகர் விருதைப் பெற்றார் ஷசானா.
அவரது பங்களிப்பால் சிங்கப்பூர், பெண்களுக்கான உலகத் தரைப்பந்து போட்டிகளில் 12வது இடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இதுவரை அப்போட்டிகளில் சிங்கப்பூர் பெற்ற ஆகச் சிறந்த நிலை அது.
ஆசிய-ஓஷியானிய தரைப்பந்துப் போட்டிகள் (ஏஓஎஃப்சி) 2022ல், சிங்கப்பூரின் 19 வயதுக்குக் குறைவானோர் (U19) அணியின் உறுப்பினராக அனைத்துலகத் தரைப்பந்து ஆட்டத்தில் முதல்முறையாகக் களமிறங்கினார் ஷசானா.
அந்த ஆட்டத்திலும் ஆட்ட நாயகர் விருதை அவர் பெற்றார். அப்போட்டிகளில் தலைசிறந்த கோல்கீப்பராகச் செயல்பட்ட பெருமையும் அவரைச் சாரும்.
ஷசானாவின் தரைப்பந்துப் பயணம், 2014ஆம் ஆண்டு, தொடக்கப்பள்ளியில் தொடங்கியது. தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடத் தொடங்கிய ஷசானா, கோல்கீப்பர் தேவைப்பட்டதால் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
“தொடக்கத்தில் நான் மிகவும் மோசமாக விளையாடினேன். பலரும் என் அணியில் விளையாடக்கூடத் தயங்கினார்கள்,” எனப் புன்னகையுடன் கூறுகிறார் ஷசானா.
ஆனால், கூடுதலான பயிற்சிக் காணொளிகளைப் பார்த்து, தன்னை அவர் மேம்படுத்திக் கொண்டார்..
தொடக்கப்பள்ளிப் பருவத்திலேயே அவரது பயிற்றுவிப்பாளர், தனது அணியில் சேர ஷசானவிற்கு வாய்ப்பளித்தார். வார இறுதிகளில் பயிற்சி செய்து, 2,3ஆம் பிரிவுகளுக்கான போட்டிகளில் பங்குபெற்றுவந்த ஷசானா, கடுமையான போட்டிகளிலும், வெவ்வேறு வயதினருடனும் விளையாடக் கற்றுக்கொண்டார்.
2019ல் U19 தேசிய அணியில் சேர்ந்த அவர், கொவிட்-19 தொற்றினால் தன் முதல் அனைத்துலக ஆட்டத்திற்காக 2022 வரை காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால் வாய்ப்பு வந்ததும், தேசிய அணியில் முக்கிய விளையாட்டாளராகத் தடம் பதித்தார் ஷசானா.
இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வெற்றியுடன் திரும்பியதும் இரு வாரங்களுக்குள் உடற்பயிற்சி, ஓட்டங்களில் வாரத்திற்கு ஐந்தாறு முறை ஈடுபடத் தொடங்கினர் ஷசானாவும் சக அணியினரும். மேலும், போட்டி உத்திப் பயிற்சிகளும் நடைபெற்றன. இவர்களது வெற்றிக்குப் பின்னால் பல்லாண்டு கடின உழைப்பு இருக்கிறது.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உட்புற, கட்டட வடிவமைப்பில் முதலாண்டு மாணவி ஷசானா. அவர் நேரத்தைச் சரியாக வகுத்துக்கொள்வது அவசியம் என்கிறார்.
“கிடைக்கும் நேரத்தை வீணாக்கமாட்டேன். வேலைகளைத் தள்ளிப் போட மாட்டேன்,” என்கிறார் ஷசானா.
முன்னாள் ஹாக்கி விளையாட்டாளரான அவரது தந்தை ஷசானாவின் ஒவ்வோர் ஆட்டத்தையும் நேரில் கண்டு ஊக்குவித்துவருகிறார். குடும்பத்தினரே தனக்கு பக்கபலம் என்கிறார் அவர்.
‘பெரிய நிலையை அடையவேண்டுமெனில் உழைப்பு அவசியம்’ என்ற மனவுறுதியுடன் அடுத்த ஆண்டு ‘ஐமேக்’, ‘செக் ஓபன்’, ‘ஏஓஎஃப்சி’ போட்டிகளைக் குறிவைத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார் ஷசானா.