மோகன் ஹரிவர்த்னி
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி
பயணம் பல நினைவுகளைக் கொடுப்பது. பல பாடங்களைக் கற்பிப்பது. மகிழ்ச்சி தருவது. முக்கியமாக மனநிறைவைக் கொடுப்பது. தெரியாத பலரை காணும் வாய்ப்பைத் தருவது.
சுற்றுச்சூழலிலும் மனிதர்களிலும் அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன அம்சங்களை பயணத்தில் ரசிப்போம்.
வெளிச்சமோ இருளோ, ஈரமோ வறட்சியோ, பசுமை நிறைந்த இடமோ பாலைவனமோ, எதைப் பார்க்கும்போது மனதில் எட்டிப் பார்க்கும் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் வேறு எதிலும் பெறவே முடியாது என்றே சொல்லலாம்.
நீண்ட பயணங்களில் இரவு முடிந்து விடியத் தொடங்கும்போது நம்மையும் அறியாமல் முகத்தில் சிறு புன்னகை மலரும். சிலுசிலுவென முகத்தில் வீசும் அதிகாலைக் காற்று புத்துணர்வைத் தரும். வழிநெடுகிலும் கண்ணுக்கு விருந்து படைக்கும் இயற்கைக் காட்சிகள். காற்றுக்கேற்ப அசையும் மரங்களும் செடிகளும் சொல்லில் வடிக்க இயலாத உணர்வைத் தரக்கூடியவை.
பயணங்களில் நான் பல்வேறு விதமான மனிதர்களைக் கண்டுள்ளேன். சாலைகளில் நடந்துசெல்லும் மனிதர்கள், எப்படியாவது பொருள்களை விற்றுவிடத் துடிக்கும் வியாபாரிகள், என்னைப்போன்றே சுற்றிப்பார்க்க வரும் மற்ற பயணிகள், கடினமாக உழைக்கும் வேலைக்காரர்கள், சிரமப்பட்டு மூட்டை தூக்குபவர்கள், யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று எதிர்பார்ப்பவர்கள், சில மனிதர்களின் ஆடம்பரமான உடை, மற்ற சிலரின் கந்தல் ஆடை, கதை பேசிக்கொண்டே சீருடையில் பள்ளிக்குச் செல்லும் சிறு பிள்ளைகள் எனப் பலரும் என் மனத்தில் தடம் பதித்துள்ளனர்.
பயணங்கள் எத்தனையோ நல்ல மனம் கொண்ட மனிதர்களின் அறிமுகத்தை எனக்குத் தந்துள்ளன.
ரயில் பயணத்தில் சந்தித்த, வாழ்க்கைக் கதையை அழகாய்ச் சொல்லும் பாட்டி, பேருந்துப் பயணம் ஒன்றில் பார்த்த இனிமையாகப் பாடும் பெண்மணி, தெருவில் நடந்து சென்றபோது, வாயைப் பிளக்க வைக்கும் வித்தைகளைக் காட்டும் திறம் வாய்ந்த கலைஞர்கள் பலர் என என்னில் தாக்கம் ஏற்படுத்தியவர்களின் பட்டியல் நீளும்.
கடற்கரையில் மெய்மறந்து ‘நீதான் என் உலகம்’ என்று சொல்லாமல் சொல்லி, நடந்துசெல்லும் காதல் ஜோடிகளும் இவர்களில் உண்டு.
பயணத்தின்போது இத்தகையோரைப் பார்க்கும்போது கிடைக்கும் வியப்பையும் மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.