புற்றுநோயை துணிச்சலுடன் எதிர்கொண்டதால் தன் தாய் அதிலிருந்து குணமடைந்ததாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ரோஜா தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த ஆண்டு தன்னுடைய தாயாருக்குப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்ததால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கையூட்டியதாகக் குறிப்பிட்ட அவர், ‘விரைவில் குணமடைவீர்கள்’ என தன் தாயிடம் அடிக்கடி கூறியதாகத் தெரிவித்தார்.
“உரிய சிகிச்சை பெற்றதால் அம்மா குணமடைந்தார். எனவே, நோய் குறித்து பதற்றப்படாமல் அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அப்போது, நிச்சயம் நல்லதே நடக்கும்,” என்று கண்கலங்கியபடி பேசினார் பிரியா பவானி சங்கர்.