ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க ‘கே.ஜி.எப்.’ படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகர் யாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயணம் கதையை மையமாக வைத்து ஏற்கெனவே பல படங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ராமாயணத்தை 3 பாகங்களாக எடுக்கப் போவதாக இயக்குநர் நித்திஷ் திவாரி அறிவித்து உள்ளார்.
பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் ராமராகவும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள்.
‘கே.ஜி.எப்.-2’ படத்துக்கு பிறகு புதிய படங்கள் நடிப்பது குறித்த அறிவிப்பை யாஷ் வெளியிடவில்லை.
‘கே.ஜி.எப்.’ படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்தி பாலிவுட் சினிமாவில் நுழைய யாஷ் திட்டமிட்டிருந்தார்.
அந்தவகையில்தான் நித்திஷ் திவாரியின் ‘ராமாயணம்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ராவணன் வேடத்தில் யாஷ் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை பரபரப்பு கொள்ள செய்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலியை மிஞ்சும் காட்சிகளோடு அதிக பொருட்செலவில் இப்படம் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் ராமர், சீதை தொடர்பான கதைக்களம், இரண்டாவது பாகத்தில் ராமர், ராவண யுத்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அல்லு அரவிந்த், மது மந்தனா படத்தைத் தயாரிக்கிறார்கள்.
யாஷின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ‘கே.ஜி.எப்.-3’ படம் 2025ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது.