‘தங்கலான்’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறைதான் அமையும் என்கிறார் நடிகை பார்வதி.
தமிழில் பல்வேறு ‘பீரியட்’ படங்கள் வந்துள்ள போதிலும், ‘தங்கலான்’ அவற்றையெல்லாம் முந்தும் வகையில் பெரும் படைப்பாக உருவாகி உள்ளது என்று பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் எனது அடிப்படைப் போக்கையே மாற்றி அமைத்துள்ளது.
“இந்தக் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் ஊடுருவியதுடன், இப்படியொரு கதாபாத்திரமாகவே வாழவும் வைத்துள்ளது. இதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
“இந்தப் படத்தில் நடித்தபோது மனிதர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அது என்னை வியக்கவும் வைத்தது.
“தமிழில் மிகத் தரமான ஒரு படைப்பில் நடித்த மனநிறைவைப் பெற்றுள்ளேன்,” என்கிறார் பார்வதி.
இதுபோன்ற படைப்புகள் அனைத்து மொழிகளிலும் உருவாக வேண்டும் என்றும் அப்போதுதான் ரசிகர்கள் உண்மையாக மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் பார்வதி மேலும் தெரிவித்துள்ளார்.