‘கண்ணகி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அம்மு அபிராமி, “கோடிக்கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு தளங்களில் கழிவறைகளுக்கு ஏற்பாடு செய்வது இல்லை,” என்று பேசியுள்ளார்.
‘பைரவா’, ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்தார் இவர்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி இந்த ஆண்டு வெளியான ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.
‘கண்ணகி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி கூறுகையில், “பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால், நடிகைகள் கழிவறை போகக்கூட சரியான வசதிகள் செய்து கொடுப்பதில்லை.
“சில படங்களில் கழிவறை போகவும், உடை மாற்றவும் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் படப்பிடிப்பு எடுக்கும்போது சமாளித்துக்கொள்ள சொல்கிறார்கள்.
“கழிவறை இல்லாத இடங்களில் எவ்வாறு சமாளிக்க முடியும். தற்காலிக கழிவறைகள் இருக்கும்போது அதை ஏன் படப்பிடிப்பு தளங்களில் வைக்கக்கூடாது. இது எங்களின் அடிப்படை உரிமைதானே?
“கண்ட கண்ட இடங்களில் கழிவறைகளுக்குச் சென்று அது பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. முன்னணி நடிகர்கள், நடிகைகள் மட்டும் கேரவன் வைத்துக்கொள்கிறார்கள்.
“ஆனால், வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளும் மனிதர்கள்தானே? கோடிக்கணக்கில் படப்பிடிப்புக்கு செலவு செய்யும்போது இந்த விஷயத்தில் சிக்கனம் பார்ப்பது எங்களைப்போன்றவர்களுக்கு சங்கடத்தை விளைவிக்கிறது. இதைக் கட்டாயம் தயாரிப்பாளர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்,” என்று பேசி பலரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்.