என்னை நாயகனாக்கி அழகு பார்க்க நினைக்கும் நடிகர் ராகவா லாரன்சை நினைத்தால் மெய் சிலிர்த்துப் போகுது என்கிறார் கேபிஒய் பாலா.
விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த இவரை, அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா எனப் புகழ்ந்து வருகின்றனர். இவர் விரைவில் சினிமாவில் நாயகனாக களமிறங்க உள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் எதிர்பாராத நேரத்தில் உதவி செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் பாலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகரும் இயக்குநரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.
இதுகுறித்த நெகிழ்ச்சியான காணொளியை பாலா இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அண்மையில் ஜீ தமிழில் நடைபெற்ற ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் நடிகர் லாரன்ஸ் அண்ணனுடன் நானும் கலந்துகொண்டேன்.
“அப்போது நடிகர் லாரன்ஸ், இவனை நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன். இயக்குநர்கள் நல்ல கதை வைத்திருந்தால் எடுத்துக்கொண்டு வாருங்கள். இவர் போன்றவர்கள் நாயகனாக நடித்தால் சமூகத்தில் பலருக்கு உதவிகளைச் செய்யமுடியும்,” என்றார்.
“அவரே ஒரு பெரிய நாயகன். அவர் என்னை ஒரு நாயகனாக்கி அழகு பார்க்க நினைத்தது என் நெஞ்சில் என்றென்றும் நிழலாடும்.
பலரும் என்னிடம் கேட்பார்கள், நீ நிறைய பேருக்கு உதவி செய்கிறாய்? உனக்கு யார் உதவி செய்வார்கள் என்று? நான் அதற்கு கடவுள் செய்வார் எனச் செல்வேன். இன்றைக்கு எனக்கு கடவுள் போல் உதவியது லாரன்ஸ் அண்ணன்தான் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.
இதையடுத்து ராகவா லாரன்ஸ் காலில் விழுந்து பாலா ஆசி பெறும் காட்சியும் அந்த காணொளியில் உள்ளது. பாலாவை கட்டியணைத்து ‘ஹீரோ சார்’ என லாரன்ஸ் அறிமுகப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பாலா நாயகனாக ஆனதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பல கிராமங்களுக்கு அவசர சிகிச்சை வாகனங்களைப் பாலா வாங்கிக் கொடுத்துள்ளார். ஆதரவற்ற சிறுவர்களைப் படிக்க வைக்கிறார். ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவச் செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்.
அண்மையில் இவர், கழிவறை இன்றி தவித்த மாணவர்களுக்காக 15 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து கழிவறை கட்டிக்கொடுத்தார். தற்போது இருவரும் சேர்ந்து பல உதவிகளைச் செய்து வருகின்றனர்.