புதுடெல்லி: கிட்டத்தட்ட 41,000 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான திட்டத்தை இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளது.
அதில் 15,000 கிலோமீட்டர் அதிவேக சாலைக் கட்டமைப்பும் அடங்கும்.
வரும் 2031-32 நிதியாண்டிற்குள் அதற்கான பணிகளை முடிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
அப்பணிகளுக்கு ரூ.19.5 லட்சம் கோடி (S$311 பில்லியன்) தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் சாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டால், அதன்பின் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இப்போது மணிக்கு 47 கிலோமீட்டர் என்றிருக்கும் சராசரி வேகம் மணிக்கு 85 கிலோமீட்டராக உயர்த்தப்படலாம்.
பயணிகள் விரைந்து செல்வதை உறுதிப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை உயர்த்துவது குறித்து இந்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஏற்கெனவே கோடிகாட்டியிருந்தார்.
இந்தியாவில் ஏறத்தாழ 50,000 கிலோமீட்டருக்கு அதிவேக சாலை கட்டமைப்பு தேவைப்படும் என அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இப்போது, 3,900 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே அத்தகைய சாலைகள் உள்ள நிலையில், வரும் 2026-27ஆம் ஆண்டுவாக்கில் அது 11,000 கிலோமீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இருபதாண்டுகளில் நான்கு மற்றும் ஆறு தடங்களைக் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.