காஸியாபாத்: ஆடவர் ஒருவரை நோக்கி எறியப்பட்ட வெடி, அவரது பிறப்புறுப்பைத் தாக்கி உயிரையே பறித்துவிட்டது.
இச்சம்பவம் இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது.
பிரதீப் என்ற ஆடவர் இரும்புக் குழாய் மூலமாக அஃப்சல் என்ற ஆடவரை நோக்கி வெடியை எறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அஃப்சல் நிலைகுலைந்து விழுந்தார்.
அவரது தொடைப்பகுதியில் உள்ள நரம்பு துண்டாகி ரத்தம் கொட்டியதாகக் கூறப்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அஃப்சலின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியைப் பெற்ற காவல்துறை, பிரதீப்மீது வழக்கு பதிந்தது. பிரதீப் தலைமறைவாகிவிட்டார்.
சிலர் பேசிக்கொண்டிருந்ததும், விடைபெற்றுத் திரும்பிய அஃப்சல்மீது பிரதீப் வெடியை எறிய, அது அவரது இடுப்பிற்குக் கீழே பாய்ந்து, உடனே அவர் கீழே விழுந்ததும் காணொளியில் தெரிந்தது.
பிரதீப் விளையாட்டாக அதனைச் செய்ததாக இன்னோர் இந்திய ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
பிரதீப்பும் அஃப்சலும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சமூக அளவில் வன்முறை வெடித்துவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.