புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக ரூ.19,000 கோடியில் உள்நாட்டில் ஐந்து உதவி போர்க்கப்பல்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (எச்.எஸ்.எல்.) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த துணைப் போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள எச்.எஸ்.எல். கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட உள்ளன.
புதிதாக தயாரிக்கப்படும் 5 துணைப் போர்க்கப்பல்களிலும் எதிரிகளின் கப்பல்கள், நீர்மூழ்கிகளை தகர்க்கும் அதிநவீன ஏவுகணைகள், அதிநவீன ரேடார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 8 ஆண்டுகளுக்குள் கடற்படையிடம் ஐந்து துணைப் போர்க்கப்பல்களும் ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.
போர்க் கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், உணவுப் பொருட்கள், குடிநீர், வெடிமருந்துகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல துணைப் போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதன்மூலம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் துறைமுகத்துக்கு வராமல் நீண்ட காலத்துக்கு கடலிலேயே முகாமிட்டிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்திய கடற்படையின் கடல்சார் திறனை பிரதிபலிக்கும் விதிமாக அரபிக் கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தியது.
இதில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ். விக்ராந்த் ஆகிய இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் பங்கேற்றன.
நாட்டின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாபெரும் போர்ப் பயிற்சிகளை இந்தியா நடத்தியது.
கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட போர்ப் பயிற்சிகளில் இது மிகவும் முக்கியமானதும் கூட என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.