புதுடெல்லி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி டெல்லியில் கைதானார்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரைக் செய்துள்ளனர் என்றும் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது தொடர்பாக பயங்கரவாதி முகமது ஷாரிக் கைதானார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த அராபத் அலி என்பவர் பல்வேறு நாச வேலைகளுக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது தெரியவந்தது.
இந்நிலையில், கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்திறங்கிய அராபத் அலியை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கிடையே, பாராமுல்லா பகுதியில் மூன்றாவது நாளாக பாதுகாப்புப் படையினர் தீவிர வாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களைக் கண்டறிவதில் ஆளில்லா சிறிய வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
சந்தேகத்துக்குரிய பகுதிகளில் பீரங்கிக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.