லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரைச் சேர்ந்த சிடக்தீப் சிங் சகல், 15, என்ற சிறுவன், நீண்ட தலைமுடி கொண்ட சிறுவன் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளான்.
சகலின் தலைமுடி இப்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. அது கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. அதுபற்றிய காணொளி ஒன்றை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது.
அதில் சகல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். தன் தலைமுடியை அலசி, சுத்தம் செய்ய, தலையை வாரிவிட, தனது தாயார் அப்போதைக்கு அப்போது உதவிவருவதாகவும் அவர் அதில் தெரிவித்து இருக்கிறார்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி அடைவதாக சகல் கூறினார்.