புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மாநிலங்களவையில் வியாழக்கிழமை இந்த மசோதாவானது நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் அமா்வு பழைய கட்டடத்தில் திங்கட்கிழமை நிறைவடைந்த பின்னா் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து சிறப்புக் கூட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முதல் நிகழ்வாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மன்ற நடவடிக்கைகள் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதேபோல் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 77ல் பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. அந்த எண்ணிக்கையில் 179 பெண்களுக்கு ஒதுக்கப்படும். மாநிலங்களவையில் மகளிருக்கு இடஒதுக்கீடு கிடையாது.
இந்தியா முழுவதும் உள்ள 4,126 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,362 பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா, தேவகவுடா பிரதமராக இருந்தபோது நாடாளுமன்ற மக்களவையில் 1996ல் முதன்முறையாக அறிமுகமானது. ஆனால், அப்போது கூட்டணி ஆட்சி என்பதால் அதனை நிறைவேற்ற இயலவில்லை.
எனினும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த மசோதா 2010ல் அறிமுகமாகி மாநிலங்களவையில் நிறைவேறியது. தொடர்ந்து மக்களவையில் கிளம்பிய கடும் எதிர்ப்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
அப்போது, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ், பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. அதேநேரம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி ஜனதா தளமும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.