புதுடெல்லி: உலக நாடுகள், அனைத்துலக அமைப்புகளின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஜி20 மாநாடு அதிகாரபூர்வமாக சனிக்கிழமை காலை தொடங்கியது.
ஜி20 தலைமையை ஏற்றிருக்கும் இந்தியா, அதன் தலைநகர் புதுடெல்லியில் தலைவர்களை வரவேற்று விருந்தோம்பல் நல்கிவருகிறது.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் வரவேற்றார்.
வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வந்திறங்கியவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வலுவாகவும் நெருக்கமாகவும் துடிப்புடனும் இருப்பதாக திரு பைடன் தெரிவித்தார்.
பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவும் திரு மோடியும் சந்தித்துப் பேசினர். இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்பை விரிவாக்கும் நோக்கில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்கு வரும் தலைவர்களுடன் இந்தியா தனது இருநாட்டுச் சந்திப்புகளையும் மும்முரமாக நடத்திவருகிறது.
அனைத்துலக அரங்கில் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சி என்று மட்டுமல்லாமல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் திரு மோடி, தமது பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தளமாக இம்மாநாட்டை வகைப்படுத்தியுள்ளார் என்றும் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
உச்சநிலை மாநாட்டின் உருவச் சின்னம், விளம்பரப் பதாகைகள், சுவர் அலங்காரங்கள், மின்னிலக்கத் திரைக்காட்சிகள் என அனைத்திலுமே தாமரை வடிவம் இடம்பெற்றுள்ளது. முதன்முறையாக இந்தப் பெரிய அளவிலான மாநாட்டை நடத்தும் இந்தியா, சீரிய முறையில் நடைபெறும் இந்த மாநாட்டின் வெற்றியை ஆளும் பாஜக சாதனைப் பட்டியலில் இடம்பெறவைக்க ஆவன செய்துவருகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை காலை நடைபெற்ற முதல் வரவேற்பு சந்திப்புக் கலந்துரையாடலில் பிரதமர் மோடிக்கு முன்னே வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் நாட்டின் பெயர் ‘பாரத்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஜி20 சின்னங்களில் இந்தியா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் பிரதமருக்கு முன்னாலும் வேறுசில இடங்களிலும் ‘பாரத்’ என்று எழுதப்பட்டிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.