பெங்களூரு: அடிக்கடி கர்நாடகம் வந்து காவிரி தண்ணீர் குடிக்கும் நடிகர் ரஜினிகாந்த், காவிரி பிரச்சினையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இல்லை எனில் அவருயை திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட இயலாத சூழ்நிலை ஏற்படும் என்று கர்நாடகாவின் சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கடுமையாக எச்சரித்தார்.
இந்தியாவின் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து கர்நாடகாவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமையும் முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தைப் பலரும் முற்றுகையிட முயன்றனர். அவர்களைக் காவல்துறை கைது செய்தது.
அப்போது வாட்டாள் நாகராஜ் பேசினார்.
“எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
இதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர்29) ) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம்.
“நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
“கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிடவிடமாட்டோம்,” என்று அவர் மிரட்டினார்.