பெய்ஜிங்: ஆசியாவின் இரண்டு ஆகப் பெரிய நாடுகளான சீனா-இந்தியாவுக்கு இடையிலான பகை நிலவுவரை போய் இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவின் சந்திரயான்-3 ஆய்வுக் கலன் சென்ற மாதம் நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரை இறங்கியதாக அறிவிக்கப்பட்டது.
அந்தத் தென் துருவச் சாதனையைப் படைத்த முதல் நாடு இந்தியா என்று அறிவிக்கப்பட்டது.
சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா நிலவில் தென் துருவப் பகுதியில் இறங்கி முதல் சாதனையை நிகழ்த்தி இருப்பதாகக் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட ஒரு தகவல் என்று சீனாவின் மிக உயர்ந்த அறிவியல் வல்லுநர் தெரிவிக்கிறார்.
சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் டாக்டர் ஊயாங் ஸியுவான் இதன் தொடர்பில் சீன மொழி சையின்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பல விவரங்களைத் தெரிவித்தார்.
சந்திரயான்-3 ஆய்வு வண்டி தரையிறங்கிய இடம் 69 டிகிரி தென் அட்சரேகை. அது தென் துருவத்திற்கு அருகே இருக்கக்கூடிய ஓர் இடம் அல்ல என்று அந்த வல்லுநர் கூறினார்.
நிலவில் 88.5 டிகிரிக்கும் 90 டிகிரிக்கும் இடைப்பட்ட தெற்கு அட்சரேகைதான் தென் துருவ இடத்தைக் குறிக்கும்.
சந்திரயான்-3 ஆய்வுக் கலன் தரையிறங்கிய இடம் நிலவின் தென்துருவப் பகுதி அல்ல. அந்த இடம் தென்துருவப் பகுதியில் இருக்கின்ற இடம் அல்ல. அந்தப் பகுதிக்கு அருகாமை இடமும் அல்ல என்றாரவர்.
சந்திரயான்-3 ஆய்வுக் கலன் இறங்கிய இடம் நிலவின் தென் துருவத்தில் இருந்து 619 கி.மீ. தொலைவில் இருக்கும் இடமாகும் என்று டாக்டர் ஊயாங் கூறுகிறார்.
இதற்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பிடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை.
சந்திரயான்-3 ஆய்வு வண்டி நிலவில் தரையிறங்கிய பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் என்ற சஞ்சிகை ஒரு செய்தியை வெளியிட்டது.
பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்டு செயல்படும் மூத்த விண்வெளி ஆய்வாளரான டாக்டர் பாங் ஸிஹோ என்பவரை மேற்கோள்காட்டி அது செய்தி வெளியிட்டது.
சீனாவிடம் இந்தியாவைவிட பெரிதும் சிறப்புமிக்க தொழில்நுட்பம் இருப்பதாக டாக்டர் பாங் கூறினார்.
இருந்தாலும்கூட இந்தியாவின் சந்திரயான்-3 தான் இதுவரை இல்லாத அளவிற்கு நிலவின் தென்துருவத்தை நெருங்கிச் சென்றிருக்கிறது.
சீனா 2019ல் நிலவுக்கு அனுப்பிய கலன் தெற்கே 45 டிகிரியில் தரையிறங்கியது. 1968ல் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஆளில்லாமல் அனுப்பிய சர்வேயர் 7 என்ற கலன் நிலவின் தெற்கே 41 டிகிரியில் தரையிறங்கியது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது என்பது முக்கியமானது என்று கருதப்படுகிறது.
அந்தப் பகுதியில் உறைபனி இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள். அதனால் அங்கு விண்வெளி வீரர்கள் அதிக நாள் தங்கி இருந்து ஆய்வுகளை நடத்த முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்காவும் சீனாவும் நிலவின் தென் துருவத்தைக் குறிவைக்கின்றன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்ப அவை திட்டத்தைத் தீட்டி வருகின்றன.
நாசா மேற்கொண்ட அப்பல்லோ விண்வெளித் திட்டம் வெற்றிகரமான முறையில் நிலவில் மனிதனை தரையிறக்கியது. அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.