புதுடெல்லி: தூய்மை, மின்னிலக்கப் பரிவர்த்தனை, உள்நாட்டு பொருள்களுக்கு ஆதரவு ஆகியவை தொடர்பான காணொளிகளை வெளியிட்டு அதன் மூலம் இந்திய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி யூடியூபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூறினார்.
தனது யூடியூப் ஒளிவழியில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த அறிவுரையை வழங்கினார்.
இந்தியாவில் ஏராளமான மக்களை யூடியூப் எட்டுகிறது என்பதைச் சுட்டிய அவர், இந்தத் தாக்கத்தை இன்னும் பயனுள்ள வழிகளில் நாம் மாற்ற வேண்டும் என்றார்.
யூடியூபர்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு நல்லவற்றை எளிதாகப் போதித்து அவர்களிடம் புரிந்துணர்வை மேம்படுத்தி ஆக்ககரமான செயல்களில் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.
தூய்மை, மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை, இந்தியப் பொருள்களை வாங்குவது என்ற உணர்வு ஆகியவற்றை மக்கள் முக்கியமானதாகக் கருத வேண்டும். இதை யூடியூபர்கள் சாதிக்க வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்திக் கூறினார்.