நாக்பூர்: தம் தந்தையின் இறுதிச்சடங்கிற்காக இந்தியாவின் புனேவில் இருந்து நாக்பூருக்கு விமானத்தில் பயணம் செய்த 40 வயது மாதுக்குப் பக்கத்தில் இருந்த ஆண் பயணி ஒருவர், சுய இன்பம் கண்டு ஆபாசமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை நாக்பூரில் விமானம் தரையிறங்கியவுடன் அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்தபோது, ஃபெரோஸ் ஷேக் எனும் அந்த ஆடவர் தப்பியோட முற்பட்டார். ஆனால், அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாது அவரைத் துரத்தினார். அவரது கதறல் சத்தத்தைக் கேட்ட தரைத்தள ஊழியர்கள், பாதுகாவலர்களைக் கொண்டு அந்தச் சந்தேக நபரைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஆசிரியரான அந்த மாது, விமானம் புறப்பட்டவுடன் தாம் உறங்கிவிட்டதாகக் கூறினார். இதனால், சன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த ஆடவரின் செயலை அவர் கவனிக்கவில்லை. அறிவிப்பு ஒன்றைக் கேட்டவுடன்தான் அந்த மாது கண்விழித்தார்.
அந்த ஆடவர் தம்மை சொரிந்துகொண்டு இருந்ததாக நினைத்த அந்த மாது, அவரைப் புறக்கணித்தார். ஆனால், அந்த ஆடவரின் செயல்மீது பின்னர் அவருக்குச் சந்தேகம் எழத் தொடங்கியது.
அந்த மாது விமானப் பணியாளர்களை அழைக்கவிருந்தார். ஆனால், அதற்குள் விமானம் தரையிறங்கிவிட்டது. கதவுகள் திறந்தவுடன் அந்த ஆடவர் விமானத்தில் இருந்து வெளியேற விரைந்தார்.
அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள இருந்த பொறியாளராக ஷேக்கை காவல்துறையினர் அடையாளப்படுத்தினர். மாது ஒருவரின் மானத்திற்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், செவ்வாய்க்கிழமை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.