புதுடெல்லி: இந்தியாவும் பிரிட்டனும் உத்தேச தாராள வர்த்தக உடன்பாட்டில் 2023 அக்டோபர் இறுதிவாக்கில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எக்னாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தி இவ்வாறு தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் தாராள வர்த்தக உடன்பாடு உட்பட வெவ்வேறான பல துறைகளிலும் அணுக்க ஒத்துழைப்பு உறுதிப்படுத்தப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் முன்னதாக உறுதிபட தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-பிரிட்டன் இரு தரப்பு வர்த்தகம் 2022ல் 36 பில்லியன் பவுண்டாக இருந்தது என்று பிரிட்டனின் வர்த்தக அமைச்சு தெரிவிக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த 30 பேரைக் கொண்ட அதிகாரப்பூர்வ குழுவினரும் இந்திய குழுவினரும் திங்கள்கிழமை அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர்.
தாராள வர்த்தக உடன்பாட்டை எட்டுவதன் தொடர்பில் இன்னமும் தீர்வுகாணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் வெற்றிகரமாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் இந்த உடன்பாடு தொடர்பில் 13 சுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்கெனவே முடித்து இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுடன் இத்தகைய தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடும் எந்தவொரு நாடும் வேறு நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களில் முத்திரையை மாற்றி இந்தியச் சந்தையில் குவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.