பாட்னா: பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இண்டியா கூட்டணி அண்மைக்காலமாக வலுப்பெறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கிய காரணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது இக்கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னாவில் வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு காங்கிரஸ் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாகச் சாடினார்.
“காங்கிரஸ் கட்சி தற்போது மாநிலத் தேர்தல்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் இதன் காரணமாகவே இண்டியா கூட்டணியின் செயல்பாடு வேகம் பெறாமல் தொய்வடைந்து போயுள்ளது என்றும் முதல்வர் நிதிஷ்குமார் சுட்டிக்காட்டினார்.
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டை காக்கவே இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் அந்த நோக்கத்துக்காகவே கம்யூனிஸ்ட் கட்சி பேரணி நடத்துகிறது என்றும் அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கக் கூட்டணிக் கட்சியினர் ஒப்புக்கொண்ட போதிலும் அந்தக் கட்சி ஐந்து மாநிலத் தேர்தல்களில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதனால்தான் இண்டியா கூட்டணியின் வேகம் தடைபட்டுள்ளது. எனவே, மாநிலத் தேர்தலுக்குப் பிறகே இக்கூட்டணியின் அடுத்தக்கட்ட கூட்டங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் முதல்வர் நிதிஷ்குமார்.
நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதி, உண்மையை மறைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசு தற்போது ஊடகங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றார்.
மாநிலக் கட்சிகள் செய்துள்ள நல்ல பணிகளுக்கு ஊடகங்களில் போதுமான விளம்பரம் கிடைப்பதில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மட்டுமே ஊடகங்கள் பட்டியலிடுகின்றன என்றும் நிதிஷ்குமார் மேலும் கூறினார்.