பாகிஸ்தான் குடிமக்கள் பாஸ்போர்ட் பெற முடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர்.
அந்நாட்டில் லேமினேஷன் தாள் பற்றாக்குறையால் பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று த எக்ஸ்பிரஸ் டிரியுயூன் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
பாஸ்போர்ட் செய்ய லேமினேஷன் தாள் ஒரு முக்கியமான பொருளாகும். ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து லேமினேஷன் தாள் இறக்குமதி செய்வது வழக்கம் என்று பாகிஸ்தான் குடிநுழைவு, பாஸ்போர்ட் (டிஜிஐ&P) இயக்குநரகத்தை மேற்கோள்காட்டி அந்த நாளேடு கூறியது.
இதனால் வெளிநாட்டில் படிக்க வேண்டும், நிதி நெருக்கடியான நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற பலரது கனவு கனவாகவே உள்ளது.
பிரிட்டன் அல்லது இத்தாலியில் உள்ள பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களால் போக முடியவில்லை.
அரசாங்கத்தின் அமைப்பு திறமையாகச் செயல்படாததற்கு நாங்களா பொறுப்பு என்று த எக்ஸ்பிரஸ் டிரிபுயூனுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியுள்ளர்.
உள்துறை அமைச்சின் ஊடகப் பிரிவின் தலைமை இயக்குநரான காதிர் யேர் திவானா, அரசாங்கம் இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும். தற்போதைய நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.
இருந்தாலும் பயணப் பத்திரங்களைப் பெற முடியாத மக்கள் சந்தேகத்துடன் காத்திருக்கின்றனர்.
அமிர் என்பவர் பாஸ்போர்ட் தயாராகிவிட்டதாக குறுந்தகவல் வந்ததாகவும் அலுவலகத்திற்குச் சென்றுகேட்டபோது இன்னும் பாஸ்போர்ட் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தினசரி பாஸ்போர்ட் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதாக வட்டாரப் பாஸ்போர்ட் அலுவலகம் ஒன்று தெரிவித்தது.
ஏறக்குறைய 3,000 முதல் 4,000 பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அது நாள்தோறும் பரிசீலித்து வருகிறது.