புதுடெல்லி: நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து கிரிக்கெட் பிரபலம் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர், ‘டீப்ஃபேக்’ போலி புகைப்படத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
உண்மையான நபர்களோடு வேறொருவரின் முக அமைப்பை தொடர்புப்படுத்தி போலியான காணொளி, புகைப்படம் ஆகியவற்றை உருவாக்குவது ‘டீப்ஃபேக்’ ஆகும்.
அண்மையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் ஆகியோரின் டீப்பேக் காணொளிகள் வெளிவந்தன. இதுபோன்று போலியாக காணொளிகள் சித்திரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு எச்சரித்து இருந்தது.
இதன்பின்னர், நடிகை கஜோலின் போலி காணொளி ஒன்று வெளிவந்தது. இந்நிலையில், சாரா டெண்டுல்கரின் டீப்ஃபேக் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
“தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படும்போது, அதனை பார்க்கும் நமக்கு வருத்தம் ஏற்படுகிறது. என்னைப்போல் உள்ள சில போலியான புகைப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவை உண்மையல்ல” என்று சாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தன் பெயரில் உள்ள போலியான சமூக ஊடக கணக்குகளைப் பின்தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.