சண்டிகர்: கடந்த வாரம் குர்கான் ஓட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் உடல் அரியானா கால்வாயில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.
பஞ்சாபில் உள்ள பக்ரா கால்வாயில் வீசப்பட்ட சடலம் அண்டை மாநிலத்திற்குச் சென்றதாகவும் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
“கொலைச் சம்பவம் ஜனவரி 1ஆம் தேதி நடந்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது. கொலையாளிகள் அழகியின் உடலை ஓட்டலில் இருந்து காரில் எடுத்துச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின,” என்று மூத்த குர்கான் காவல்துறை அதிகாரி முகேஷ் குமார் கூறினார்.
“அழகி குத்தியிருந்த பச்சை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. குர்கான் ஓட்டல் உரிமையாளருடன் தனிமையில் இருந்த படங்களைக் காட்டி அவரை மிரட்டியதால் அழகி தலையில் சுடப்பட்டுள்ளார்,” என காவலர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அபிஜித் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான ரவி பங்கா தலைமறைவாக இருக்கிறார். அவரை காவலர்கள் தேடிவருகின்றனர்.