பாட்னா: முதல்வர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், பாஜகவுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாலையே தனது அமைச்சரவையை அமைக்க உள்ளதாக சனிக்கிழமை செய்தி வெளியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் எனது பதவியைத் துறந்து விட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன்,” என தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வரானார்.
அதன் பிறகு பாஜகவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார். வரும் மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ் குமார் விரும்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரது முயற்சியில் இண்டியா கூட்டணி உருவானது. இந்தக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் குறித்து பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தியது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார்.
இதை லாலு மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், திடீரென குறுக்கிட்ட ராகுல் காந்தி, இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றார். இதனால் கோபம் அடைந்த நிதிஷ் குமார், இண்டியா கூட்டணியில் தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்றார்.
தொடர்ந்து, இண்டியா கூட்டணித் தலைவர்கள், மம்தா, அர்விந்த் கெஜ்ரிவால், லாலு ஆகிய தலைவர்களை நிதிஷ் குமார் சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில், பீகாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவர் பீகாரில் மக்கள் தலைவர் என அனைத்துத் தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர்.
பாஜகவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியைக் கவரும் வகையில் இருப்பதால், இண்டியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதுதான் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் நிதிஷ் குமாரிடம் வலியுறுத்தினர்.
இதனால் பாஜக ஆதரவுடன், பீகாரில் புதிய ஆட்சியை அமைக்க நிதிஷ் குமார் முடிவு செய்தார். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் 9வது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தனது அமைச்சரவையில் இருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தள அமைச்சர்களை மாற்றிவிட்டு பாஜக எம்எல்ஏக்களை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பீகாரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. அதில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதங்கள் பாஜக எம்எல்ஏக்களிடம் இருந்து பெறப்பட்டு முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி, ‘‘அரசியலில் எந்தக் கதவும் மூடப்படுவதில்லை. தேவைப்பட்டால் திறக்கப்படும்,’’ என்றார்.