புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய அத்தியாவசியப் பொருள்களை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முந்த்ரா, தூத்துக்குடி, நவசேவா, துக்ளகாபாத் ஆகிய நான்கு கடல் துறைமுகங்கள் வழியாக மட்டுமே அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும் என்று வெளிநாட்டு வணிகத் தலைமை இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நடப்பு நிதியாண்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை, அரிசி உள்ளிட்ட ஒன்பது பொருள்களைக் குறிப்பிட்ட அளவு மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இம்மாதம் 5ஆம் தேதி இந்தியா நீக்கியிருந்தது.
குறிப்பாக, மாலத்தீவுக் கட்டுமானத் துறைக்கு முக்கியமாகத் தேவைப்படும் ஆற்று மணல், கற்களுக்கான அளவை 25 விழுக்காடு, அதாவது 1,000,000 மெட்ரிக் டன்வரை ஏற்றுமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அத்துடன், முட்டை, வெங்காயம், அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரம்பும் அதிகரிக்கப்பட்டது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கொள்கையின் அடிப்படையில், மாலத்தீவில் மனிதர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க இந்தியா தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளது என்று அப்போது மாலத்தீவிற்கான இந்தியத் தூதரகம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
மாலத்தீவு அதிபராக முய்சு பதவியேற்ற பிறகு இந்தியா - மாலத்தீவு உறவு கசந்து வருவது குறிப்பிடத்தக்கது.