புதுடெல்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை (ஏப்ரல் 24) தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம், இன்னொரு அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது? அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது தீர்ப்பு பின்னர் வழங்கப்படும்’‘ எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்,’‘ எனக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.
இதனிடையே, தோ்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பை ஒத்திவைத்தது.
இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரி நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
கண்ட்ரோலிங் யூனிட், பேலட் யூனிட், விவிபேட் ஆகிய மூன்றும் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர் கருவியின் உதவியுடன் இயங்குவதாகவும், அனைத்தும் ஒருமுறை பொருத்தினால் மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டது.
மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் மூன்று இயந்திரங்களும் தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு 45 நாள்கள் பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் குறிப்பிட்ட இயந்திரம் மட்டும் பாதுகாக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தற்போது மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், இவ்வழக்கின் தீா்ப்பு குறித்து பெரும் எதிா்பார்ப்பு நிலவி வருகிறது.